Tamil(Aided)
- Home
- Index
தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் Dr. M. Justin Beula
உலகின் மூத்தமொழியான அமிழ்தினும் இனிய தமிழ்மொழியின் செழுமையையும் வளமையையும் அடுத்ததலைமுறைக்குக் கொண்டு செல்லும் சீரியப் பணியினைத் தமிழ்த்துறை செவ்வனே செய்துவருகின்றது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய செவ்வியல் இலக்கியங்கள் முதல் தற்கால இலக்கியங்கள் வரை முத்தமிழின் முழுசுவையையும் மாணவியர் அறியும் வகையில் பாடத்திட்டம் அமையப்பெற்றுள்ளது. தனிமனிதனின் அகவளர்ச்சிக்கும் புறவளர்ச்சிக்கும் ஆளுமைவளர்ச்சிக்கும் தாய்மொழியே அடிப்படைக் காரணி. மேலும் அறிவு வளர்ச்சிக்குக் காரணமான சிந்தனையை வளர்க்கும் திறன் தாய்மொழிக்கே உண்டாதலால் இலக்கியங்கள் உணர்த்தும் சமூகமதிப்பீடுகளை உணர்ந்து ஆளுமைத் திறனுடன் வாழ தமிழ் வழிகாட்டுகின்றது. மாணவியரின் அறிவுப்பசிக்கு விருந்தளிக்கும் வகையில் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டு புத்தகவடிவில் அச்சிட்டு வழங்கப்படுகின்றது. மாணவியரின் பேச்சாற்றலையும், ஆளுமைத்திறனையும் முத்தமிழ் இலக்கியப் படைப்பாற்றலையும் வெளிக்கொணரும் களமாக முத்தமிழ்விழாவும் சரக்கொன்றை மாணவியர்மலரும் அமைந்துள்ளது. மேலும் கருத்தரங்கங்கள், பயிலரங்கங்கள், இலக்கியமன்ற கூட்டங்கள், அறக்கட்டளைச் சொற்பொழிவுகள், பயிற்சிப்பட்டறைகள், களஆய்வுகள், கண்காட்சிகள் போன்றவற்றை நடத்தி தாய்மொழிப்பற்றை வளர்த்து மொழிவளர்ச்சிக்குத் துணைநிற்கின்றது. அரசுப்போட்டித்தேர்வுகளில் வெற்றிப் பெற தாய்மொழியாம் தமிழின் தேவையைஉணர்த்தி, மொழிபெயர்ப்புத்துறை, இதழியல்துறை, ஊடகத்துறை, அச்சுத்துறை, பதிப்புத்துறையென வேலைவாய்ப்பிற்குரிய தளமாகத் தமிழ் விரிந்து செல்வதைவிளக்கி, அதற்கேற்ற பயிற்சியையும் அளித்து தமிழ்த்துறை தம்கடமையைச் செவ்வனே செய்துவருகின்றது.
தமிழ்த்துறை வரலாறு
திருச்சிலுவைக் கல்லூரி நாகர்கோவிலில் செயல்படத் தொடங்கிய 1965ஆம் ஆண்டுமுதலே தமிழ்த்துறையும் தம் அரும்பணியைத் தொடங்கிவிட்டது. பகுதி ஒன்று பொதுத்தமிழ் பாடத்திட்டத்தின் மூலம் அனைத்துமாணவிகளுக்கும் மொழிப்பற்றையூட்டும் அரியவாய்ப்பு கிடைக்கப்பெற்றது. அருட்சகோதரி எஸ்டலின் முதல் தமிழ்த்துறைத் தலைவராகப் பொறுப்பேற்றார். அவரைத் தொடர்ந்து திருமதி.அலெக்சாண்டிரியா, முனைவர் ரீட்டாசவரிமுத்து, அருட்சகோதரி ரெஜினா, திருமதி.இந்திரா, முனைவர் பத்மா, முனைவர் சுந்தரபாய், முனைவர் ஹெர்மனா ஜில்ட் ஆராச்சி, முனைவர் ரூத் ஜாய், முனைவர் பிரேமாவதி, முனைவர் ஜெயசீலி போன்ற பேராசிரியைகளின் ஆளுமையாலும் ஆற்றலாலும் துறை பலநிலைகளில் வளர்ச்சி கண்டது. 1973ஆம் ஆண்டுமுதல் முத்தமிழ்விழாவினை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடிவருகின்றது. இதனையொட்டி மாணவிகளுக்கு பல்வேறுவகையான போட்டிகள் நடத்தி பரிசளித்து ஊக்கப்படுத்துவதுடன் நலிந்துவரும் நாட்டுப்புறக்கலைக்கும் உயிரூட்டி வருகின்றது. 2005ஆம் ஆண்டுமுதல் சரக்கொன்றை மாணவியர்மலரை வெளியிட்டுத் தமிழன்னையை அலங்கரிக்கின்றது. 2007ஆம் கல்வியாண்டில் கல்லூரி தன்னாட்சிப் பெற்றப்பின் பகுதி ஒன்று பொதுத்தமிழ் பாடத்திட்டத்தைத் தயாரித்து புத்தகவடிவில் அச்சிட்டு வழங்கிவருகின்றது. முன்னாள் மாணவி திருமதி ஆன்ட்ரூசின் நிதிநல்கையால் 2007முதல் வி.வி. அறக்கட்டளைசொற்பொழிவு, 2011முதல் வி.வி.அறக்கட்டளை ஒருநாள் கருத்தரங்கம் போன்றவை நடத்தப்படுகின்றன. முன்னாள் துறைத்தலைவர் முனைவர் ஹெர்மனா ஜில்ட் ஆராச்சி அவர்களின் நிதிநல்கையில் 2011 முதல் ரோணிமஸ்ஆராச்சி அறக்கட்டளைச் சொற்பொழிவு, 2014 முதல் முனைவர் ஹெர்மனா ஜில்ட்ஆராச்சி அறக்கட்டளைச் சொற்பொழிவு போன்றவை ஆண்டுதோறும் நடத்தப்பட்டுவருகின்றன. 2018ஆம் கல்வியாண்டு முதல் தமிழறிவோம் எனும் பல்கலைக்கழக அளவிலான வினாடிவினா போட்டி நடத்தப்படுகின்றது. முனைவர் பிரேமாவதி, முனைவர் ஹெர்மனா ஜில்ட் ஆராச்சி ஆகியோர் கல்லூரிக்கு நல்கிய நிதியிலிருந்து தமிழில் சிறந்த மாணவிகளுக்குப்பரிசுகள் வழங்கி ஊக்குவிக்கப்படுகின்றது. தொடக்கக்காலம் முதலே துறையில் பெரும்பாலான பேராசிரியைகள் முனைவர் பட்டம் பெற்றிருந்தது சிறப்புக்குரியது. இன்றளவும் அது தொடர்ந்து கொண்டிருக்கிறது. தொடர் ஆய்வின் வெளிப்பாடாக அதிக எண்ணிக்கையில் ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டுத் தமிழ்த்துறை கல்லூரி நிர்வாகத்தின் பரிசையும் பாராட்டையும் பெற்றது. இதன் நீட்சியாக முனைவர் பிரேமாவதி- தனிப்பாடல் திரட்டில் தன்னுணர்ச்சிப் பாடல்கள், முனைவர் ஜெயசீலி- இதம் தரும் தோழமை, முனைவர் சுனிதா- காணி இனமக்களின் வாழ்வியல் நம்பிக்கைகள் எனும் நூல்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக்குழுவின் நிதிநல்கையில் குறுந்திட்ட ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதுடன் செம்மொழி மத்தியநிறுவனத்தின் நிதியுடன் கருத்தரங்கங்களையும் பயிலரங்கங்களையும் நடத்தி தம் தனித்தன்மையைக் காத்து வருகின்றது. பன்னாட்டு, தேசியஅளவிலான கருத்தரங்கங்களை நடத்தி, ஆய்வுக்கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கம் செய்துவெளியிட்டுள்ளது சிறப்புக்குரியது. தமிழ்த்துறைப் பேராசிரியைகளின் அரும்முயற்சியால் 2011ஆம் கல்வியாண்டு முதல் தமிழை முதன்மைப்பாடமாகக் கொண்ட இளங்கலை பாடப்பிரிவு சுயநிதிதிட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டு சிறப்புடன் செயல்பட்டு வருகின்றது.
குறிக்கோள்
மொழியின் அடிப்படைத்திறன்களை(கேட்டல்,பேசுதல்,படித்தல்,எழுதுதல்)வளர்த்தல்.
படைப்புத்திறமையை உருவாக்குதல்.
இலக்கியநயத்தைஉணர்ந்து இன்புறச்செய்தல்.
தாய்மொழியில் சிந்திக்கும் ஆற்றலைவளர்த்தல்.
வாழ்வியல் அறங்களைக் கற்பித்து நாகரிகமான,பண்பாடானமனிதராக வாழச்செய்தல்.
முத்தமிழ் விழா
உயிராகி உணர்வாகி உயர்வாகவாழும் செம்மொழி எம் தமிழ்மொழி. அயல்மொழியின் ஆதிக்கம் பள்ளிகளில் வேரூன்றிய 1970களில் தாய்மொழி காத்திடல் மொழிக்காவலரின் பெரும்பணியாகியது. அக்காலகட்டத்தில் எமது கல்லூரியின் தமிழ்த்துறையினரும் தாய்த்தமிழ் காக்கத்துணிந்ததன் துவக்கமே 1973 இல் தமிழுக்கு விழா எடுக்க துவங்கிய முத்தமிழ் விழா. அன்றுதொட்டு இன்றுவரை இயல்,இசை,நாடகம் எனும் முத்தமிழான இன்தமிழுக்கு இனியவிழா எடுத்துவருகிறது எம் தமிழ்த்துறை. எழுத்தாளர்கள், சான்றோர்கள் என பலரும்; மாணவியரின் படைப்பாற்றலையும் ஆளுமையையும் வளர்க்கத்தெடுக்கின்றனர். கன்னித்தமிழ் முதல் கணினித்தமிழ் வரை அன்னைத்தமிழின் ஆட்சி, மாட்சிமை பெற்றிட கன்னியர் கல்லூரியில் தமிழ்த்துறையினர் தொடர்ந்து தொல்தமிழுக்கு தோள் கொடுத்து வருகின்றனர்.
பயிலரங்கங்கள்
கருத்தரங்கங்கள்
இலக்கியமன்றக் கூட்டங்கள்
அறக்கட்டளைச் சொற்பொழிவுகள்
சிறுஆராய்ச்சித் திட்டம் (Minor Research Project)
விருதுகள்
நூல் வெளியீடு
சரக்கொன்றை மாணவியர் மலர் கல்விபயிலும் மாணவியர் பாவலராய் நாவலராய் தமிழால் மலர்ந்திட, 2005 முதல் சரக்கொன்றை மாணவியர் மலர் தொடர்ந்து மலர்கிறது. மலைவாழை அல்லவோ கல்வி என்று தலைவாரிபூச்சூடி பாடசாலைக்குப் பெண்களை அனுப்பிவைத்த பாவேந்தனின் தமிழ்நெறி காத்திட கவிதை, கட்டுரை, சிறுகதை, ஓவியம், நகைச்சுவைத்துணுக்குகள், அரியதகவல்கள் எனமாணவியர் பல்திறமும் பக்கங்களில் பதிந்து, இதழின் இதழ்களில் மணம் பரப்பிவருகின்றது. 2005 ஆம் ஆண்டு கையெழுத்துப் பிரதியாக வெளிவந்த சரக்கொன்றை பின்னர் கணினி மயமானது. 2018ஆம் ஆண்டு வரை ஒன்பது முறை சரக்கொன்றை மலர் மலர்ந்துள்ளது.
பேராசிரியைகள் எழுதிவெளியிட்டநூல்கள்
குறிப்பிடத்தக்கவை…